ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கொலை
ரூ. 50 லட்சம் கேட்டு கடந்த வாரம் கடத்தப்பட்ட தில்லி கல்லூரி மாணவர் ஆயுஷ் நவ்டியால் (21) கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 50 லட்சம் கேட்டு கடந்த வாரம் கடத்தப்பட்ட தில்லி கல்லூரி மாணவர் ஆயுஷ் நவ்டியால் (21) கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தை துவாரகாவில் உள்ள வாய்க்காலில் தில்லி போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். கொலை செய்யப்பட்ட ஆகாஷ், குடும்பத்தில் ஒரே குழந்தையாவார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
மாணவர் ஆயுஷ் நவ்டியால், தில்லி பல்கலைக்கழகத்தின் ராம்லால் கல்லூரியில் பொருளியல் மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை அவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
அதில், மர்ம நபர் ஒருவர் ஆயுஷ் செல்லிடப்பேசியில் இருந்து எனக்கு வாட்ஸ் ஆப் தகவல் ஒன்று வந்தது. அதில் ஆயுஷை பிடித்து வைத்துள்ளோம், அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டப்பட்டிருந்தது என ஆயுஷின் தந்தை தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் தில்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி ஆயுஷை தேடி வந்தனர். இந்நிலையில், ஆயுஷின் சடலம் துவாரகாவில் உள்ள வாய்க்காலில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே ஆயுஷின் உறவினர் ஒருவர் கூறுகையில், "தனது மகனை மீட்க ரூ. 10 லட்சத்தை கடத்தல்காரர்களுக்கு அளிக்க பெற்றோர் தயாராக இருந்தனர். பணத்துடன் அவர்கள் கடத்தல்காரர்களைத் தேடி பல்வேறு பகுதிகளில் அலைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீஸாரும் பின்தொடர்ந்தனர். ஆனால் இரண்டு நாள்களாக யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஆயுஷின் சடலாத்தைத் தான் கண்டுபிடித்தோம்' என்றனர்.