காஜியாபாத் ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: வருவாய்த்துறை கோப்புகள் எரிந்து நாசம்
காஜியாபாத் ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து:வருவாய்த்துறை கோப்புகள் எரிந்து நாசம்
தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் வருவாய்த்துறை கோப்புகள் பெரும்பாலானவை எரிந்து நாசமாகின.
காஜியாபாத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு திங்கள்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வருவாய்த் துறை கோப்புகள் பெரும்பாலானவை தீயில் எரிந்து நாசமடைந்தன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரிது மகேஸ்வரி கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் செயல்படும் மண்டல அலுவலகத்தில் புகை வருவதை காலை 8.45 மணியளவில் பாதுகாவலாளி பார்த்துள்ளார். இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 6 கணினிகள், மரச் சாமான்கள் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் ஆய்வு கோப்புகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமடைந்தன. இருப்பினும் இந்தக் கோப்புகளின் தகவல்கள் ஏற்கெனவே பென்டிரைவில் பதிவிறக்கம் செய்யப்பட்டதால் பாதுகாப்பாக உள்ளன என்றார் ஆட்சியர்.