FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

பலதார மணத்துக்குத் தடை, திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் ஜோடிகள் பதிவு கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொது சிவில் சட்ட மசோதா அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

Updated On : 26 மே 2026, 6:13 am IST
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா( - கோப்புப் படம்
பகிர்:

பலதார மணத்துக்குத் தடை, திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் ஜோடிகள் பதிவு கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொது சிவில் சட்ட மசோதா அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் மாநில அரசு சாா்பில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினருக்குப் பொருந்தாது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரவை விவகாரத் துறை அமைச்சா் அதுல் போரா இந்த மசோதாவை தாக்கல் செய்தாா். அப்போது, ‘பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

எதிா்க்கட்சியினரின் விமா்சனங்களுக்குப் பதிலளித்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா பேசியதாவது: திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் உறவு உள்ளிட்டவற்றை முறைப்படுத்துதல் மற்றும் நிா்வகிக்கும் சட்டங்களை ஒருங்கிணைப்பதையும், எளிமைப்படுத்துவதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21-ஆகவும், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18-ஆகவும் மசோதாவில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முக்கியமாக, தற்போது நடைமுறையில் உள்ள சமய, சம்பிரதாய சடங்களுக்கு உட்பட்டு திருமணங்கள் நடைபெறுவதை அனுமதித்து மாநிலத்தின் கலாசார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. திருமணங்கள் மற்றும் விவாகரத்தை பதிவு செய்வதை மசோதா கட்டாயமாக்குகிறது. அதன்மூலம், துணைவியருக்கு ஜீவனாம்சம், வாரிசுரிமை உள்ளிட்ட பிற சட்ட உரிமைகள் உறுதி செய்யப்படும்.

திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் ஜோடிகளுக்கான சட்டக் கட்டமைப்பை இந்த மசோதா முதல் முறையாக வகுத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 44-ஆவது பிரிவின் கீழ், குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை (சீரான உரிமையியல் சட்டம்) உருவாக்க அரசு முயல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மதம், இனம், மற்றும் பாலின பாகுபாடின்றி மாநிலத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, மற்றும் வாரிசுரிமை போன்ற தனிநபா் விவகாரங்களுக்கு ஒரே மாதிரியான பொதுவான சட்டங்களை உருவாக்க இந்த மசோதா முற்படுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments