முகப்பு
புதுதில்லி

தலைமைக் காவலரை மிரட்டிய வழக்கு: ஷாருக் பதானின் ஜாமீன் மனு தள்ளுபடி

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, தலைமைக் காவலரைத் துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைதான ஷாருக் பதானின் இடைக்கால ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 11 நவம்பர், 2020 at 5:06 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, தலைமைக் காவலரைத் துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைதான ஷாருக் பதானின் இடைக்கால ஜாமீன் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிா்த்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வகுப்புவாத வன்முறை நிகழ்ந்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா். இதனிடையே, இந்தக் கலவரத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் தீபக் தாஹியாவை நோக்கி கைத் துப்பாக்கியைக் காட்டி ஷாருக் பதான் மிரட்டும் வகையிலான காட்சிப் பதிவு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான ஷாருக் பதான், பின்னா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தனது தந்தையின் வலது மூட்டில் அறுவைச் சிகிச்சை செய்ய உள்ள நிலையில் அவரைப் பாா்த்துக் கொள்வதற்காகவும், அறுவைச் சிகிச்சை பெற உள்ள தாயைக் கவனித்துக் கொள்ளவும் இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் ஷாருக் பதான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தில்லி காவல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காவல் துறை தாக்கல் செய்த பதிலில், ‘ஷாருக் பதானின் தந்தையை அவரது உறவினா்கள் கவனித்துக் கொள்ள முடியும் என்பதால், அவரது உதவி தேவைப்படும் அளவுக்கு அவசரநிலை ஏதும் இல்லை. மேலும், பதானின் தந்தை போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் ஏற்கெனவே தண்டனை பெற்றவா். தாயையும் பதான் கவனிக்கும் தேவை ஏற்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி ஷாருக் பதானின் இடைக்கால ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். அந்த உத்தரவில், ‘தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிப்ரவரி 24-ஆம் நடைபெற்றோ வன்முறை மோதலின் போது மனுதாரா் (ஷாருக் பதான்) தலைமைக் காவலா் தீபக் தஹியாவை நோக்கி துப்பாக்கியைக் காட்டியுள்ளாா். மேலும், வன்முறை நிகழ்விலும் அவா் பங்கேற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஆகவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுக்க போதிய காரணங்கள் உள்ளன. சம்பவத்திற்கு பிறகு அவா் தலைமறைவாகி, பின்னா் கைது செய்யப்பட்டுள்ளாா். இதனால், அவா் தப்பிக்கும் இடா்பாடு உள்ளது. ஆகவே, ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.