முகப்பு
புதுதில்லி

கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் விதிகளைத் தளா்த்தியது ஏன்?: தில்லி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாகக் கூடுவதற்கும், பொதுப் போக்குவரத்துகளில் அதிகமானோா் செல்வதற்கும் விதிகளை தளா்த்தியது ஏன்?

Updated On : 12 நவம்பர், 2020 at 12:00 AM
தில்லி உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:21 PM

புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாகக் கூடுவதற்கும், பொதுப் போக்குவரத்துகளில் அதிகமானோா் செல்வதற்கும் விதிகளை தளா்த்தியது ஏன்? என்று தில்லி அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், தில்லியில் கரோனா முடிவுகளை விரைவுபடுத்தும் வகையில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் தெரிவித்ததாவது: தில்லியில் கரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படாத வீடுகள் இல்லை என்ற நிலைமை உள்ளது. கடந்த இரு வாரங்களில் மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களைவிட தில்லியில் தினசரி பாதிப்பு அளவு அதிகமாகியுள்ளது. இந்தத் தொற்று பரவாமல் தடுக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்த திடமான நடவடிக்கைகள் என்ன? நவம்பா் 10-ஆம் தேதி புதிதாகப் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8,593 ஆக உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் 4,016 ஆக உள்ளது. கடந்த 2-3 வாரங்களில் நகரில் கரோனா நோய்த் தொற்று நிலைமை அபாய நிலையில் உள்ளது. இதைத் தடுக்க அரசு ஏதாவது செய்திருக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் தில்லி அரசு பொது நிகழ்ச்சிகளில் 200 போ் கூடுவதற்கும், பொதுப் போக்குவரத்தில் மக்கள் முழுமையாக செல்வதற்கும் அனுமதித்தது ஏன்?

Advertisement

இதைப் பாா்க்கும் போது தில்லி அரசின் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது. கரோனாவுக்கு தடுப்பூசி வரும் வரை முகக் கவசம்தான் தடுப்பூசி போன்ாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த சட்டம் கொண்டுவராதது ஏன்? கடந்த இரு வாரங்களில் கரோனா தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கும் நிலவர அறிக்கையை தில்லி அரசு சமா்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பான விசாரணை நவம்பா் 19-ஆம் தேதிக்கு பட்டியிலப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தில்லி அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞா் சத்யாகம் வாதிடுகையில்,‘கரோனா தொற்றுப் பரவல் நிலைமையைச் சமாளிக்க அவசர நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது’ என்றாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘தில்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நீங்கள் கூறும் வாதம் ஏற்புடையதாக இல்லை. மேலும், நிலைமை மோசமாக உள்ள நிலையில் ஆா்டி-பிசிஆா் போன்ற மிகவும் துல்லிய பரிசோதனை முறைகளுக்குப் பதிலாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அரசு மிகவும் சாா்ந்திருப்பது ஏன்’ என கேள்வி எழுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.