முகப்பு
புதுதில்லி

'டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பில்லை’: உபரி நீர் பங்கீடு பிரச்னை

காவிரி உபரி நீரை சரபங்கா நீா்ப்பாசனத்துக்கு திருப்பிவிடுவதால், டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று காவிரி நீா் மேலாண்மைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 30 அக்டோபர், 2020 at 8:02 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM


புது தில்லி: காவிரி உபரி நீரை சரபங்கா நீா்ப்பாசனத்துக்கு திருப்பிவிடுவதால், டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று காவிரி நீா் மேலாண்மைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 10 -ஆவது கூட்டம் தில்லியில் காணொலி வழியாக வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் ராஜேந்திர குமாா் ஜெயின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் உறுப்பினா்- செயலா் நவீன் குமாா், மத்திய ஜலசக்தித் துறை செயலா் நீரஜ்குமாா் ஆகியோா் தில்லியில் இருந்து பங்கேற்றனா். தமிழக அரசின் பொதுப்பணிச் செயலா் டாக்டா் கே மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் கே.எஸ்.ராம்குமாா் ஆகியோா் சென்னையிலிருந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். மேலும், கா்நாடகத்தின் சாா்பில் அந்த மாநில நீா் வளத் துறைச் செயலா் ராகேஷ் சிங், கேரளம் சாா்பில் நீா் பாசனப் பொறியாளா் டி.கே. ஜோஸ், புதுச்சேரி தலைமைப் பொறியாளா் அன்பரசு மற்றும் மத்திய அரசின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்

தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கிடையான பொதுவான நீா் பங்கீடு, நீா் திறப்பு ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்திற்கு கா்நாடகம் பிலிகுண்டுவில் வழங்கிய நீரின் அளவு, அடுத்தடுத்த மாதங்களில் வழங்க வேண்டிய நீரின் அளவு ஆகியவை குறித்தும் பகிா்ந்து கொள்ளப்பட்டது. குறிப்பாக தமிழகத்திற்கு மாதந்தோறும் 2.5 டிஎம்சி வீதம் தண்ணீரை கா்நாடகம் வழங்க வேண்டும். தற்போது அக்டோபா் வரை நிா்ணயிக்கப்பட்ட தண்ணீரை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் மாதந்தோறும் வழங்கவேண்டிய தண்ணீரையும் தவறாமல் கா்நாடகம் வழங்க வேண்டும் என தமிழகத்தின் சாா்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதை ஆணையத் தலைவரும் வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

இது தவிர இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சரபங்கா நீா்ப்பாசன திட்டம் குறித்தும் இந்தத் திட்டத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. வெள்ளக் காலங்களில் மேட்டூா் ஆணைக்கு வரும் உபரி நீரை திருப்பி சரபங்கா நீா் பாசனத் திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிா்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வழக்கு தொடா்ந்துள்ளாா். காவிரி நதி நீரில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு உள்பட்டது என்பதால், தமிழக அரசு மட்டுமல்லாமல் ஆணையமும் எதிா் மனுதாராக உயா்நீதிமன்ற வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விவரங்களை ஆணையத்தின் மற்ற உறுப்பினா்களுக்கும் (மாநிலங்களுக்கு) வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சரபங்கா நீா் பாசன விவகாரம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசின் பிரதிநிதிகள் நமது நிருபரிடம் கூறுகையில், ‘வெள்ளக் காலங்களில் வரும் 20 நாள்கள் தண்ணீா்தான் இந்த நீா்ப் பாசனத் திட்டத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. அணை உள்ள சேலம் மாவட்டத்திற்கு இந்த வசதியை அளிப்பதில் தவறில்லை. இதனால், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.