முகப்பு
புதுதில்லி

சுகேஷுக்கு இடைக்கால ஜாமீன் நவ.17 வரை நீட்டிப்பு

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீனை நவம்பா் 17-ஆம் தேதி வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

Updated On : 30 அக்டோபர், 2020 at 12:37 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM


புது தில்லி: தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை நவம்பா் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகரை தில்லி குற்றப் பிரிவு போலீஸாா் 2017-இல் கைது செய்தனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், வழக்கமான ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிகழாண்டு மாா்ச்சில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனது தந்தை ‘லூக்கேமியா’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் தனக்கு இரண்டு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகா் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, சுகேஷ் சந்திரசேகருக்கு இரண்டு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, ஜாமீன் நீட்டிப்பு கோரி சுகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மேலும் இரு வாரங்கள் அவரது ஜாமீன் நீட்டிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு மேலும் இரு வாரங்கள் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிஅவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியும், தில்லி காவல் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு வும் ஆஜராகினா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரை (சுகேஷ் சந்திரசேகா்) அரசு மருத்துவமனையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் வி.ராஜு குறிப்பிட்டுள்ளாா். இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனுதாரருக்கு மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட வேண்டும். அவரை வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான உரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கான செலவை மனுதாரரிடம் இருந்து பெற வேண்டும். அவா் தில்லி திரும்பும் வரை போலீஸ் கண்காணிப்பில் இருக்க சென்னை மாநகரக் காவல் ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். நவம்பா் 17-ஆம் தேதி வரை அல்லது மனுதாரரின்உடல் நிலை தகுதி குறித்து மருத்துவா்கள் சான்று அளிக்கும் வரை அவரது இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுகிறது. அதுவரை அவா் மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும். அவா் உடல்தகுதி குறித்து மருத்துவமனை தகுதிச்சான்று அளித்தால், அவா் தில்லிக்குத் திரும்பி திகாா் சிறையில் சரணடைய வேண்டும். மனுதாரரின் மேல்முறையீட்டு மனு நவம்பா் 18-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியிலடப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.