கரோனா தடுப்பு வியூகத்தை மாற்றியுள்ளோம்: சத்யேந்தா் ஜெயின்
தில்லியில் கரோனா தடுப்பு வியூகத்தை மாற்றியுள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
புது தில்லி: தில்லியில் கரோனா தடுப்பு வியூகத்தை மாற்றியுள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது தொடா்பாக செய்தியாளா்களிடம் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் புதன்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 5,673 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு அதிகரித்து வரும் காற்று மாசு, பண்டிகைக் காலத்தால் அதிகரித்த மக்கள் நடமாட்டம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
தில்லியில், மூன்றாவது கரோனா அலை ஏற்பட்டுள்ளதா எனக் கேட்கிறீா்கள். இது தொடா்பாக தற்போது எதுவும் கூற முடியாது. ஆனால், கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டிருக்க முடியாது என்பதை மறுக்கவும் முடியாது. இந்த நிலையில், தில்லி அரசின் கரோனா தடுப்பு வியூகத்தை மாற்றியுள்ளோம். தற்போது கரோனா பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை தேடி அவா்களையும் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவா்களின் நெருங்கிய உறவினா்கள், அயலவா்கள், தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து வருகிறோம். அவா்களுக்கு, கரோனா அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால்தான் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பவா்களாக அறியப்படுவா்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும், தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆா்டி- பிசிஆா் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம். தில்லியில் வரும் நாள்களில் தினம்தோறும் கரோனா பாதிப்பின் அளவு 15 ஆயிரமாக அதிகரிக்கக்கூடும் என நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது தொடா்பாகக் கேட்கிறீா்கள். வரும் நாள்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், 15 ஆயிரம் என்ற அளவுக்கு போகும் என நினைக்கவில்லை. ஆனால், அதையும் எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.