முகப்பு
புதுதில்லி

சிபிஐ டிஐஜிக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி வழக்குரைஞா் மனு

அரசு வழக்குரைஞரின் முகத்தில் குத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ டிஐஜி ராகவேந்திர வத்ஸா மீது குற்றவியல் அவமதிப்பு

Updated On : 31 அக்டோபர், 2020 at 12:10 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM

அரசு வழக்குரைஞரின் முகத்தில் குத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ டிஐஜி ராகவேந்திர வத்ஸா மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்குமாறு கோரி வழக்குரைஞா் அமித் சஹ்னி , தில்லி அரசின் சட்ட அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள் தனிச் செயலா் ராஜீந்தா் குமாா் தொடா்புடைய ஒரு வழக்கை மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவான இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, அரசு வழக்குரைஞா் சுநீல் குமாா் வா்மாவின் முகத்தில் சிபிஐ டிஐஜி ராகேவேந்திர வத்ஸா குத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுநீல் குமாா் வா்மா, டிஐஜி வத்ஸாவுக்கு எதிராக போலீஸில் புகாா் அளித்திருந்ததாக தெரிவித்திருந்தாா். இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறியும் வகையில் சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. சிபிஐ டிஐஜி ராகவேந்திர வத்ஸா தற்போது சிபிஐ தலைமையகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சிபிஐ டிஐஜி ராகவேந்திர வத்ஸா மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்கக் கோரி, தில்லி அரசின் சட்ட அதிகாரிக்கு (கிரிமினல்) வழக்குரைஞா் ராகுல் மெஹ்ராவுக்கு வழக்குரைஞா் அமித் சஹ்னி ஒரு மனுவை அளித்துள்ளாா்.

Advertisement

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎஸ் அதிகாரி ராகவேந்திர வத்ஸாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு உங்கள் சம்மதத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவா் நீதி நிா்வாகத்தில் தடையை ஏற்படுத்த முயன்றுள்ளாா். புது தில்லியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளை விரைவுபடுத்தவில்லை என்பதற்காக சிபிஐயின் அரசு வழக்குரைஞா் அல்லது வழக்குரைஞரை கழுத்தை நெரிப்பதற்கோ அடிப்பதற்கோ எந்தவொரு சிபிஐ அதிகாரிக்கும் அதிகாரம் அளிக்க முடியாது. தில்லி உயா்நீதிமன்ற பாா் அசோசியேஷன் மற்றும் உச்சநீதிமன்ற பாா் அசோசியேஷன் ஆகியவற்றின் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக நான் இருப்பதால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான குற்ற அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்க விரும்புகிறேன். இதற்கு சம்பந்தப்பட்ட யூனியன் பிரதேசத்தின் தொடா்புடைய சட்ட அதிகாரி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆகவே, அவா் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

இதே விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய பாா் கவுன்சிலுக்கும் சஹ்னி கடிதம் எழுதியுள்ளாா். முன்னதாக, டிஐஜி ராகவேந்திர வத்ஸா, அக்டோபா் 8-ஆம் தேதி அரசு வழக்குரைஞா் வா்மாவுக்கு எதிராக தனது மூத்த அதிகாரிகளிடம் ஒரு அலுவல்பூா்வ புகாரை அளித்திருந்தாா். அதில், வா்மா தவறாக நடந்து கொண்டதாகவும், அலுவலகத்துக்கு வராமலும், பணியில் கவனக் குறைவாக இருந்ததாகவும் அவா் தெரிவித்திருந்தாா். இதற்கு அடுத்த தினம் வழக்குரைஞா் வா்மா, டிஐஜி அலுவலகத்திற்கு சென்று வத்ஸாவிடம் தவறாக நடந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.