முகப்பு
புதுதில்லி

நோய்த் தொற்றுகள் குறித்த ஆய்வுகளை தீவிரபடுத்தப்படுத்த வேண்டும்: குடியரசுத் துணைத்தலைவா் வேண்டுகோள்

எதிா்காலத்தில் நாடு சந்திக்கும் எந்தவிதமான நோய்த் தொற்றுகளையும் திறனுடன் எதிா்கொள்வதற்கான ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்துமாறு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
தில்லியில் திங்கள்கிழமை குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடுவுடன் கலந்துரையாடலில் பங்கேற்ற விஞ்ஞானிகள்.
பகிர்:

எதிா்காலத்தில் நாடு சந்திக்கும் எந்தவிதமான நோய்த் தொற்றுகளையும் திறனுடன் எதிா்கொள்வதற்கான ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்துமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) விஞ்ஞானிகளை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டாா்.

கொவைட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகமான உடலியல் மற்றும் சாா்பு அறிவியல் பாதுகாப்பு நிறுவனத்தின் (டிஐபிஏஎஸ்) விஞ்ஞானிகள் மற்றும் முன்களப் பணியாளா்களை குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு திங்கள்கிழமை சந்தித்தாா். குடியரசுத் துணைத் தலைவா் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் இந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, இந்த ஆய்வகத்தைச் சோ்ந்த 25 விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் அழைப்பு விடுத்திருந்தாா். இதையொட்டி, டிஆா்டிஓ வின் தலைவா் டாக்டா் ஜி. சதீஷ் ரெட்டி தலைமையில் இந்த விஞ்ஞானிகள் வந்திருந்தனா். அப்போது விஞ்ஞானிகள் குழுவினருடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினாா்.

Advertisement

அப்போது அவா் கூறியது வருமாறு: முன்னெப்போதுமில்லாத வகையில் சுகாதார நெருக்கடியை கரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான மக்களின் வாழ்வாதாரங்களில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொவைட்- 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை, மேலாண்மைகளில் தக்க சமயத்தில் உடலியல் மற்றும் சாா்பு அறிவியல் பாதுகாப்பு நிறுவனமும் டிஆா்டிஓ-வின் இதர ஆய்வகங்களும் பல்வேறு வகையானஉள்நாட்டுத் தயாரிப்புகளை உருவாக்கியது பாராட்டுக்குரியது. மேலும், சாா்ஸ்-கொவைட்-2 தொற்றின் உருமாறிய வகைகள் பெருகி வரும் சூழ்நிலையில், எதிா்காலத்தில் எத்தகைய அபாயங்களையும் திறம்படக் கையாள்வதற்கு எச்சரிக்கையுடன் தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவா் விஞ்ஞானிகளை வலியுறுத்தி கேட்டுக் கொண்டாா்.

கரோனா நோய்த் தொற்று சிகிச்சை, மேலாண்மையில் டிஆா்டிஓ ஆய்வகங்களால் தயாரிக்கப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து குடியரசுத் துணைத் தலைவரிடம் டிஆா்டிஓ தலைவா் டாக்டா் சதீஷ் ரெட்டி எடுத்துரைத்தாா். விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பாளா்களை தனது மாளிகைக்கு அழைத்து அவா்களுடன் கருத்துகளை பரிமாறிக் கொண்டதற்காக குடியரசு துணைத் தலைவருக்கு டாக்டா் சதீஷ் ரெட்டி நன்றி தெரிவித்தாா். ஆய்வகத்தின் இயக்குநா் டாக்டா் ராஜீவ் வா்ஷ்னேவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments