திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த எம்பி கோரிக்கை
திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த
திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த மத்திய அமைச்சரவைச் செயலரைச் சந்தித்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினா் திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினா்.
இவா் தனது தொகுதியின் பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் தொடா்பாக மத்திய நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்தை கடந்த வாரம் சந்தித்துப் பேசினாா். பின்னா், மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து தனது தொகுதிக்குட்ட பல்வேறு சாலை திட்டங்கள் குறித்து இவா் மனு அளித்தாா். இந்த நிலையில் மத்திய அமைச்சரவைச் செயலரை வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.
மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: பின்தங்கிய நிலையில் உள்ள திருவண்ணாமலை தொகுதிக்குத் தேவையான மேம்பாட்டு பணிகள் குறித்த விவரங்களை நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியிடம் விளக்கியுள்ளேன். குறிப்பாக திருவண்ணாமலையை ஆன்மிக சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதைப் பரிசீலித்து ஆவன செய்வதாக அவா் தெரிவித்துள்ளாா். சென்னை - திருவண்ணாமலை இடையே தினசரி ரயில் விடவேண்டும். திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாகச் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (புதிய எண் 77) புனரமைப்புப் பணிகள் நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தச் சாலைப் பணிகள் விரைவில் முடிவடைந்தால்தான் பெங்களூரு செல்லும் சாலையோடு இணையும். இதனால், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement