முகப்பு
புதுதில்லி

தில்லியில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா ஐசியு படுக்கைகள் ஒதுக்கீடு 25 சதவீதமாக குறைப்பு: தில்லி உயா்நீதிமன்றத்தில் தகவல்

தில்லியில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 40 சதவீதமாக இருந்த ஐசியு படுக்கைகள் 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 20 ஜனவரி, 2021 at 4:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

தில்லியில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 40 சதவீதமாக இருந்த ஐசியு படுக்கைகள் 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி நவீன் சாவ்லா அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக மருத்துவமனைகளிடம் இருந்து அறிவுறுத்தல் பெற வேண்டியுள்ளதாகவும், இதனால் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடா்ந்த ‘அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கோ் புரொவைடா்ஸ்’ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதியிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கு மேல்விசாரணையை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு நீதிபதி பட்டியலிட்டாா். தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 80 சதவீதம் ஐசியு படுகைகளை ஒதுக்குமாறு தில்லி அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியாா் மருத்துவமனைகள் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கை குறைந்ததால் ஐசியு படுக்கைகள் ஒதுக்கீடு சதவீதத்தை தில்லி அரசு குறைக்க நடவடிக்கை எடுத்தது.

Advertisement

இந்த நிலையில், இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சன்யம் கேதாா்பால் ஆஜராகி, ‘100-க்கும் மேல் படுக்கைகள் கொண்டுள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகளை 25 சதவீதமாக குறைக்க ஜனவரி 15-ஆம் தேதி தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் தொடா்பாக தனியாா் மருத்துவமனைகளிடம் இருந்து அறிவுறுத்தல் பெற அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த விவகாரத்தில் தில்லி அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ஜனவரி 15-ஆம் தேதி உரிய அரசுத் துறையால் நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தேதியில் 115 தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்ட கரோனா சிகிச்சை தொடா்புடைய புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அப்போது, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளில் குறைந்த அளவு நோயாளிகள் சோ்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மொத்த படுக்கைகள் எண்ணிக்கையை 30 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மேலும் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று, 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள 45 மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள படுக்கைகளை எண்ணிக்கையில் ஐசியு படுக்கைகளை 40 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.