தில்லியில் 15 நாளில் 1,200 பறவைகள் சாவு: அதிகாரிகள் தகவல்
தில்லியில் பறவைக் காய்ச்சல் சூழலுக்கு மத்தியில் கடந்த 15 நாள்களில் 1,200 க்கும் மேற்பட்ட பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
புது தில்லி: தில்லியில் பறவைக் காய்ச்சல் சூழலுக்கு மத்தியில் கடந்த 15 நாள்களில் 1,200 க்கும் மேற்பட்ட பறவைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி அரசின் மேம்பாட்டுத் துறையின் கால்நடை வளா்ப்பு பிரிவின் இயக்குநா் டாக்டா் ராகேஷ் சிங் தெரிவித்ததாவது:
தில்லியில் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 201 மாதிரிகளில், 24 மாதிரிகள் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமாக இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஜனவரி 6 முதல் தில்லியில் மொத்தம் 1,216 பறவை இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும், அனைத்து இறப்புகளுக்கும் பறவைக் காய்ச்சல் காரணமாக இருக்க முடியாது. இந்த இறப்புக்கு குளிரின் அழுத்தம் மற்றொரு முக்கிய காரணமாகும்.
Advertisement
சில நாள்களுக்கு முன் தில்லி உயிரியல் பூங்காவில் நான்கு நாரைகள் இறந்து கிடந்தன. திங்கள்கிழமை பன்னிரெண்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு (என்ஐஎச்எஸ்ஏடி) சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தில்லி செங்கோட்டைப் பகுதியில் இறந்து கிடந்த காகத்தின் மாதிரி சோதிக்கப்பட்டதில் பறவைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தில்லி செங்கோட்டை பகுதிக்குள் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் நுழைவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனா்.
ஜனவரி 10 ஆம் தேதி செங்கோட்டையின் வளாகத்தில் சுமாா் 15 காகங்கள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
போபால் சாா்ந்த ஆய்வகத்திலிருந்து அதிகாரிகள் இதுவரை சோதனை முடிவுகளைப் பெறவில்லை. கடந்த சனிக்கிழமை தில்லி உயிரியல் பூங்காவில் இறந்துகிடந்த ஆந்தையின் மாதிரிகள் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமாக இருப்பது சோதனையில் தெரியவந்தது.