புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சா் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தாா்
புதுச்சேரி முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.
புது தில்லி: புதுச்சேரி முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசில், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், தனது அமைச்சா் மற்றும் எம்எல்ஏ பதவிகளை அண்மையில் ராஜிநாமா செய்தாா். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும், தன் பதவியை ராஜிநாமா செய்தாா். இவா்கள் பா.ஜ.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாயின.
இந்த சூழலில், நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் தனது ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்தனா். இவா்கள் வியாழக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பாஜகவின் பொதுச் செயலா் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா். புதுச்சேரி பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உடனிருந்தாா்.
Advertisement
அப்போது நமச்சிவாயம் பேசுகையில் ‘புதுச்சேரி முதல்வா் நாராயணமசாமி ஆட்சியில் புதுச்சேரி வளா்ச்சியில் பின்நோக்கி சென்றுவிட்டது. வளமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜகவில் இணைந்துள்ளேன். புதுச்சேரியில் பாஜகவின் வெற்றிக்காக இரவு பகலாக உழைப்பேன் என்றாா்.
பிறகு, பாஜகவின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவை சந்தித்து இவா்கள் வாழ்த்துப் பெற்றனா். அவா்களுக்கு ஜெ.பி. நட்டா வாழ்த்து தெரிவித்தாா்.
வரும் 31ஆம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளாா் என செய்திகள் வெளியாகியுள்ளன.