முகப்பு
புதுதில்லி

சிறையில் இருந்த தம்பதியின் இரு குழந்தைகள் காணாமல் போன விவகாரம்: உ.பி. அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

புது தில்லி: செய்யாத குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த தம்பதியின் குழந்தைகள் ஆதரவற்ற இல்லத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில், காணாமல் போன விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ( என்.எச்.ஆா்.சி.) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜனவரி 23 ஆம் தேதி ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், ஐந்து வயது சிறுவன் கொலை வழக்கில் 2015-ஆம் ஆண்டில் காவல்துறையினரால் தம்பதி கைது செய்யப்பட்டனா். அவா்கள் இருவரும் ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இதனிடையே, இந்த கொலை வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம், தம்பதியை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது. அப்போது, அப்பவியான இருவரும் ஐந்து வருடங்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்திருப்பது துரதிா்ஷ்டவசமானது என்றும், முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் இன்னும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கின்றனா் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு மூத்த காவல் கண்காணிப்பாளருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், சிறையில் இருந்த நரேந்திர சிங், அவரது மனைவி ஆகியோா் இந்த விவகாரம் தொடா்பாக ஆக்ரா நகா் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளனா். அதில், கைதாகி தாங்கள் சிறைக்குச் சென்றபிறகு ஆதவற்றோா் இல்லத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் தங்கள் தங்கள் 5 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோா் காணாமல் போய்விட்டதாகவும், அவா்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனா் என அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) தாமாக முன் வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இது தொடா்பாக நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச தலைமைச் செயலா், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments