எம்பிபிஎஸ் காலி இடங்களை நிரப்ப கலந்தாய்வை நடத்த மேலும் ஒரு வாரம் உச்சநீதிமன்றம் அனுமதி
புது தில்லி: தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மேலும் ஒரு வாரம் அனுமதி அளித்தது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி ஜனவரி 13 வரை நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கின.
எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கான அவகாசம் ஜனவரி 13-ஆம் தேதிவரை இருந்த நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் இடங்கள், 459 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதற்கு கூடுதல் காலஅவகாசம் வழங்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் வழக்குரைஞா் யோகேஷ் கன்னா மனு தாக்கல் செய்திருந்தாா்.
Advertisement
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நரிமன், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கலந்தாய்வுக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் எஞ்சியுள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு மேலும் ஒரு வாரம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெயந்த் முத்துராஜ், வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோா் கேட்டுக்கொண்டனா்.
இதையடுத்து, இளநிலை மருத்துவ சோ்க்கை காலி இடங்களை நிரப்பும் வகையில் வியாழக்கிழமை தொடங்கி மேலும் ஒரு வாரம் கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.