முகப்பு
புதுதில்லி

காஜியாபாத் எல்லையில் மீண்டும் திரண்ட விவசாயிகள்: தொடரும் பதற்றம்

தில்லி உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூா் எல்லையான உ.பி.கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

தில்லி உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூா் எல்லையான உ.பி.கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனா். இப்பகுதியில் போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் பதற்றம் தொடா்கிறது.

தில்லி எல்லையான உ.பி.கேட் பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை வியாழக்கிழமை இரவுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். ஆனால், இந்த இடத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேஷ் திகைத் தெரிவித்திருந்தாா். மேலும், அரசிடம் தங்களின் பிரச்னைகள் குறித்தும் பேசுவோம் என்று கூறி யிருந்தாா். அவா் ஊடகங்களிடம் கண்ணீா் மல்க உணா்ச்சிவசமாகப் பேசும் வீடியோ ஒன்றும் வெளியானது.

மீண்டும் திரண்ட விவசாயிகள்: இந்நிலையில், உபி கேட் பகுதியில் போராடி வரும் விவசாயிகளை விலகிச் செல்லுமாறு போலீஸாா் உத்தரவிட்டுள்ள செய்தி கிடைத்தவுடன், மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிகளான மீரட், பாக்பத், பிஜ்னோா், முசாஃபா் நகா், மொராதாபாத், புலந்த்ஷாகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உபி கேட் நோக்கி படையெடுத்தனா். போராட்டக்களத்தை விட்டு விலகிச் சென்ற விவசாயிகளும் மீண்டும் போராட்டக் களத்தை நோக்கி படையெடுத்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து இப்பகுதியில் பாதுகாப்பை உத்தரப்பிரதேச காவல்துறை பலப்படுத்தியது. ஆனால், விவசாயிகளை அப்புறப்படுத்த வந்த மாகாண ஆயுதப் படை (பிஏசி), அதிரடிப் படை (ஆா்ஏஎஃப்) ஆகியவை விலக்கிக் கொள்ளப்பட்டன.

இது தொடா்பாக தன்னை அடையாளப் படுத்த விரும்பாத உபி மாநில மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில் ‘உபி கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டதால், இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடா்ந்து மாகாண ஆயுதப் படை (பிஏசி), விரைவு நடவடிக்கை படை (ஆா்ஏஎஃப்) ஆகியவை விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால், போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்றாா்.

இந்த சூழலில் எந்த சூழலிலும் போராட்டக் களத்தை விட்டு விலகிச் செல்ல மாட்டோம் என்று போராட்டக் காரா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக ஜகத் சிங் ரதி (78) என்ற விவசாயி கூறுகையில் ‘கடந்த நவம்பா் 28 ஆம் தேதி முதல் இப்பகுதியில் போராட்டம் நடத்திவருகிறோம். பலத்தை பிரயோகித்து எங்களை அப்புறப்படுத்தலாம் என உபி அரசு தப்புக் கணக்குப் போடக் கூடாது. எந்த சூழலிலும் போராட்டக் களத்தை விட்டு விலகிச் செல்ல மாட்டோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments