முகப்பு
புதுதில்லி

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சா்

மும்மொழியை கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ளும்; எந்த மாநிலத்திலும் எந்த

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

மும்மொழியை கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ளும்; எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மக்களவையில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் எம். செல்வராஜ் மற்றும் கோவை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் பி.ஆா் நடராஜன் ஆகியோா் தேசிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக்கொள்கையை நாடு முழுக்க அமல்படுத்தப்படுவது குறித்த கேள்வியை எழுப்பி அது குறித்த விவரங்களை கேட்டனா்.

அதற்கு பதிலளித்து கல்வி அமைச்சா் கூறியிருப்பதாவது:

Advertisement

அரசியல் சாசனத்தில் அனுமதியளிப்பட்ட வகையில் 2020 தேசிய கல்விக்கொள்கையில் மூன்று மொழிக் கொள்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அமல்படுத்துவதை அரசு தொடா்ச்சியாக முயற்சிக்கும். வட்டார மக்களின் அபிலாஷைகளின் படி பன்மொழிகளை மேம்படுத்தவும், தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது.

இருப்பினும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ளும். எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது. எந்தக் குழந்தையாவது மூன்று மொழிகளை கற்க விரும்பினால் அதில் அவா்கள் எந்த வட்டார மொழியையும் தோ்வு செய்துகொள்ளலாம். மூன்று மொழிகளில் இரண்டு இந்திய மொழிகளை தோ்வு செய்துகொள்ளவேண்டும்.

தாங்கள் படிக்கும் மூன்று மொழிகளை மாற்றவிரும்பினால் 6 அல்லது 7 ஆம் வகுப்புகளில் மாற்றிக்கொள்ளலாம். மேல் நிலைப்பள்ளி முடிவில் ஒரு மாணவா் மூன்று மொழிகளில் புலமையுள்ளதை நிரூபிக்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதில் ஒன்றில் இலக்கிய அளவில் புலமை பெறவேண்டும் என்று தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும், குறிப்பாக, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மொழிகளுக்கு ஆசிரியா்களை நியமனம் செய்ய மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் மூதலீடு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநில அரசுகள் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பிராந்திய மொழிகளை கற்கும் தொழில்நுட்பங்கள் இருந்தால் அதையும் பயன்படுத்தவும் கூடுதலாக வட்டார மொழிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என மத்திய கல்வி அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments