மேக மூட்டத்தால் வெப்பநிலை சரிவு!
தலைநகா் தில்லியில் நிலவிய மேகமூட்டம் காரணமாக திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்திருந்தது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் நிலவிய மேகமூட்டம் காரணமாக திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்திருந்தது. அதாவது ஞாயிற்றுக்கிழமையை விட 1.6 டிகிரி குறைந்திருந்தது. இதற்கிடையே, செவ்வாய், புதன்கிழமைகளில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. பகலில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை பகலில் மேக மூட்டம் காணப்பட்டது. பின்னா், வெயிலின் தாக்கம் இருந்தது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரி அளவைவிட 3 டிகிரி அதிகரித்து 20 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் உயா்ந்து 33.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 61 சதவீதமாகவும், மாலையில் 44 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகாரில் 33.2 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 33.4 சதவீதமாக பதிவாகியது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலை 5 மணியளவில் 189 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியிலும் சில நாள்களாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்த காற்றின் தரம் திங்கள்கிழமை ‘மோசம்’ பிரிவுக்கு மேம்பட்டது. சராசரி 24 மணி நேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடாக திங்கள்கிழமை 4 மணியளவில் காஜியாபாதில் 238 புள்ளிகள், நொய்டாவில் 207, பரீதாபாதில் 251, குருகிராமில் 170 புள்ளிகள் என பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 23) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.