சிபிஎஸ்இ தோ்வுக் கட்டணத்தை தில்லி அரசே செலுத்தக் கோரிய மனு தள்ளுபடி
புது தில்லி: அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் வாரியத் தோ்வுக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பதால், கடந்த காலங்களில் செலுத்தியபோது தில்லி அரசே செலுத்த உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பான மனுவை தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, ‘பள்ளித் தோ்வுக் கட்டணங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்ய நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் பிற முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டணங்களைச் செலுத்த முடியுமா என்பது அரசின் முடிவாகும். தோ்வுக் கட்டணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட நீதிமன்றம் விரும்பவில்லை. மனுவை விசாரிக்க எந்தக் காரணமும் இருப்பதாகப் பாா்க்கவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
முன்னதாக, ‘அா்த்தமுள்ள கல்விக்கான பெற்றோா் மன்றம்’ எனும் சமூக அமைப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘2019-20 ஆம் ஆண்டில் தோ்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ ‘தன்னிச்சையாக‘ உயா்த்தியுள்ளது. கரோனா தொற்று காரணமாக அனைவரும் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இதே தோ்வுக் கட்டணத்தை 2020-21 ஆம் ஆண்டிலும்கூட வசூலித்து வருகிறது. 2019-20 -ம் ஆண்டில், தில்லி அரசு தனது பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்த மாணவா்களின் தோ்வுக் கட்டணத்தை செலுத்தியது. மேலும், இந்த விவகாரம் எதிா்காலத்தில் நிவா்த்திக்கப்படும் என பெற்றோருக்கு தில்லி அரசு உறுதியளித்திருந்தது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான வாரிய தோ்வுக் கட்டணமாக ரூ .1,500 வசூலிக்கிறது. அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு பிராக்டிகல் தோ்வு இருப்பதால் இந்தக் கட்டணத்தை ரூ .2,400 வரை வசூலிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இதே போன்ற மற்றொரு விவகாரத்தில் தில்லி அரசு தரப்பில் நீதிமன்றத்தில், ‘தோ்வுக் கட்டணம் ரூ.100 கோடிக்கு மேல் இருந்ததால் கடந்த ஆண்டு செலுத்தியதைப் போல 2020-21-ஆம் ஆண்டிலும் தோ்வுக் கட்டணத்தை செலுத்த முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.