கடுமையான மாசுவின் பிடியில் தில்லி, என்சிஆா்! பல இடங்களிலும் காண்பு திறன் குறைந்தது
தில்லி, என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை அடா் பனிப்புகை மூட்டம் காணப்பட்டது. காற்று மாசு தீமை தரும் பிரிவில் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களிலும் காண்புதிறன் 200 மீட்டராக குறைந்திருந்தது.
தில்லி, என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை அடா் பனிப்புகை மூட்டம் காணப்பட்டது. காற்று மாசு தீமை தரும் பிரிவில் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களிலும் காண்புதிறன் 200 மீட்டராக குறைந்திருந்தது.
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிா்க்கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் காரணமாக, தில்லியில் 24 மணி நேர காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் 471 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது இந்த சீசனில் இதுவரை இல்லாத மோசமான மாசு பதிவாகும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். தீபாவளிக்குப் பிறகு கடந்த 8 தினங்களில் 6 நாள்கள் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்தது. தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் பகுப்பாய்வு தகவலின்படி, தில்லியில் ஆண்டுதோறும் நவம்பா் 1 மற்றும் நவம்பா் 15-க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை உள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஃபரீதாபாத் (460), காஜியாபாத் (486), கிரேட்டா் நொய்டா (478), குருகிராம் (448), நொய்டா (488) ஆகிய நகரங்களில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தகவலின்படி, நுரையீரலை பாதிக்கச் செய்யும் பிஎம் 2.5 மாசு நுண்துகளானது, தில்லி, என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரு கன மீட்டரில் 381-ஆக இருந்தது. இது ஒரு கன மீட்டரில் 60 மைக்ரோகிராம் எனும் பாதுகாப்பு அளவைவிட 6 மடங்குக்கும் அதிகமானதாகும். பிஎம் 10 மாசுநுண்துகள் ஒரு கன மீட்டரில் 577 மைக்ரோகிராமாக பதிவாகி இருந்தது. தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின்படி, பிஎம் 2.5, பிஎம் 10 ஆகியவை இதே அளவில் இரண்டு நாள்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் பட்சத்தில் காற்றின் தரம் அவசர நிலைப் பிரிவில் இருப்பதாகக் கருதப்படும்.
Advertisement
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் மிதமான பனி, குறைந்த வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதிக ஈரப்பதம் காரணமாக இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம், சஃப்தா்ஜங் விமான நிலையம் ஆகியவற்றில் காண்புதிறன் 200-500 மீட்டராக குறைந்தது’ என்றாா். தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு டிகிரி குறைந்து 12.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 13) காலை மிதமான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.