முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!

பாஜக சார்பில் போட்டியிட அண்ணாமலையைத் தவிர்த்து முக்கிய நிர்வாகிகள் மூன்று பேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:25 PM
அண்ணாமலை - வினோஜ் - சூரியா.
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அண்ணாமலையைத் தவிர்த்து முக்கிய நிர்வாகிகள் மூன்று பேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடிபிடித்திருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று (ஏப். 2) வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதிதான் இழுபறியாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில், மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை, கோவை வடக்கில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அவிநாசி (தனி) தொகுதியில் எல். முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, நீண்ட காலமாக பதவிக்காகக் காத்திருந்த விஜயதரணிக்கு, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர் முகங்களாகப் பார்க்கப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

வேளச்சேரி தொகுதியில் நீண்ட நாள்களாக போட்டியிட முனைப்புக் காட்டி வந்ததாகக் கூறப்படும், பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் போட்டியிட விரும்பிய வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு அசோக் என்பவர் போட்டியிடுகிறார்.

பாஜக மாநிலச் செயலரான வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட நீண்டநாள்களாக முனைப்புக் காட்டியதாகக் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்.

அவருக்கு இந்த முறை துறைமுகம் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.  இதேபோல, பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

summary

In the Assembly elections, three key functionaries—excluding Annamalai—have been denied the opportunity to contest on behalf of the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.