பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சண்டீகர் காவல் துறையின் மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த குர்தேஜ் சிங் மற்றும் அமன்பிரீத் சிங் ஆகியோர் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களைத் தேடி, பஞ்சாப் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ரூப்நகர் மாவட்டத்தில் சோதனைகளை நடத்தியதாக தகவல்கள் மேலும் தெரிவித்தன. சாதாரண உடையில் இருந்த சில காவல் துறையினர் தங்கள் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியதாக அமன்பிரீத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Advertisement
இதற்கிடையில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகத் தங்கள் குடும்பத்தினர் அவருடன் தொடர்பில் இல்லை என்று குர்தேஜின் தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அலுவலகத்தைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குண்டு வெடித்துச் சிதறியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) அங்கு ஆய்வு நடத்தியதுடன், விசாரணையையும் முன்னெடுத்துள்ளனா்.
மத்திய தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனா்.