அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளது குறித்து...
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அபுதாபியின் அஜ்பான் பகுதியைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை (ஏப். 3) ஈரான் வீசிய 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 5 இந்தியர்கள் மற்றும் 6 நேபாள நாட்டினர் உள்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதல்களில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யேமன், இந்தோனேசியா, அஜர்பைஜான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 203 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்துடன், குவைத் நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தைக் குறிவைத்து கடந்த திங்கள்கிழமை (மார்ச் 30) அன்று ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.