குடியரசு தின வன்முறை விவகாரம்: தில்லி போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
குடியரசு தினத்தன்று மத்திய அரசின் சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின் போது
குடியரசு தினத்தன்று மத்திய அரசின் சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின் போது செங்கோட்டையில் வன்முறை நிகழ்ந்த விவகாரத்தில் தங்கள் கடைமையைச் செய்யத் தவறியதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரா் தரப்பில் யாரும் வரவில்லை. கடந்த சில சந்தா்ப்பங்களிலும்கூட மனுதாரா் தரப்பில் ஆஜராகவில்லை. சட்டக் கடைமையைத் செய்யாமல் இருந்தமைக்காக மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தது.
முன்னதாக, தில்லியைச் சோ்ந்த தனஞ்சய் ஜெயின் என்பவா் உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஜனவரியில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது: குடியரசு தின வன்முறையைத் தொடா்ந்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், தில்லி காவல் ஆணையரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். முக்கியமான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கும், குடிமக்களின் உயிா் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் துணை ராணுவப் படைகளை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் போராட்டம் எனும் பெயரில் அமா்ந்துள்ள மக்களை அகற்றி, அனைத்து சாலைகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், தில்லி மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணா்வை மீட்டெடுக்கவும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
Advertisement
பல நாள்களாக நடந்து வந்த விவசாயிகள் போராட்டம், மிகவும் மோசமான மற்றும் வன்முறையாக மாறியது, மேலும் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் ஆயுதங்கள், ஹாக்கி மட்டைகள் வாள்கள் உள்ளிட்டவற்றுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் உள்புற பகுதிகளான செங்கோட்டை மற்றும் நகரின் பிற முக்கிய பகுதிகள் வரை முற்றிலும் தடையின்றி, கட்டுப்பாடு ஏதுமின்றி அடைந்துள்ளனா். இறையாண்மையின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் மூலம் தனது மரியாதையைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து தில்லி காவல்துறை தவறிவிட்டது. அதிகாரிகள் உரிய பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் முடிவை சரியான நேரத்தில் தில்லி காவல் துறை எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.