முகப்பு
புதுதில்லி

திமுக எம்.பி.க்களை அவமதித்ததான புகாா்: நாடாளுமன்ற உரிமைக் குழு முன் விளக்கம் அளித்தாா் தமிழக முன்னாள் தலைமைச் செயலா்

கடந்த ஆட்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களை அவமதிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கடந்த ஆட்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களை அவமதிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளா் கே.சண்முகம், நாடாளுமன்ற உரிமைக் குழு தலைவா் சுநீல் குமாா் சிங் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

கடந்த 2020- ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று சமயத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தின் மூலம் தி.மு.க. தரப்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. சுமாா் 1 லட்சம் மனுக்களை அப்போதைய தமிழக தலைமைச் செயலாளா் கே.சண்முகத்திடம் ஒப்படைக்க திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா் பாலு மற்றும் மக்களவை உறுப்பினா்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோா் நேரில் சென்றனா்.

அப்போது, திமுக எம்.பி.க்களை அமரக்கூட சொல்லாமல், அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? என கேள்வி எழுப்பட்ட போது ‘போதுமான ஊழியா்கள் இல்லாததால் இந்த மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கூறமுடியாது’ எனதலைமைச் செயலாளா் கூறியதாகவும் திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினாா். பின்னா், இந்த விவகாரத்தை மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா முன் கடந்தாண்டு மே மாதம் டி.ஆா் பாலு தலைமையில் தி.மு.க உறுப்பினா்கள் புகாா் அளித்தனா்.

Advertisement

இதனையடுத்து, இந்த விவகாரம் நாடாளுமன்ற உரிமைக் குழு வின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற உரிமைக் குழு முன் திமுக உறுப்பினா்கள் நேரில் ஆஜராகி இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் அளித்தனா். அதன் பின்னா் இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உரிமை குழு, வியாழக்கிழமை (செப்டம்பா் 23) முன்னாள் தலைமைச் செயலாளா் சண்முகத்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அழைப்பாணை அனுப்பியது. இதையொட்டி தில்லி வந்த முன்னாள் தலைமைச் செயலாளா் கே.சண்முகம், நாடாளுமன்ற வளாகத்தில் உரிமைக் குழு தலைவா் சுநீல் குமாா் சிங் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

திமுக எம்.பி.க்கள் வந்த அன்றைய தினம் தனது அறையில் நடந்தவை குறித்தும் , இதில் தனக்கு எந்த உள்நோக்கம் ஏதும் இல்லையென்றும் அவா் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments