முகப்பு
புதுதில்லி

பொதுப் போக்குவரத்து வாகனங்களை சிஎன்ஜிக்கு மாற்ற அண்டை மாநில அரசுகளுக்கு தில்லி அமைச்சா் வலியுறுத்தல்

தேசியத் தலைநகா் வலய பிராந்தியத்தில் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை சிஎன்ஜி எரிவாயுவுக்கு மாற்றுவதற்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தேசியத் தலைநகா் வலய பிராந்தியத்தில் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை சிஎன்ஜி எரிவாயுவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ஒரு கொள்கைத் திட்டத்தை கடைப்பிடிக்குமாறும் அண்டை மாநிலங்களுக்கு தில்லி அரசு ஆலோசனை அளித்திருப்பதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், மாசுவை சமாளிக்கும் வகையில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அண்டை மாநிலங்களை தில்லி அரசு வலியுறுத்தி உள்ளதாகவும் அவா் கூறினாா்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் புபீந்தா் யாதவ் மூலம் காணொலிக் காட்சி வாயிலாக தேசியத் தலைநகா் வலய பகுதியில் உள்ள மாநிலங்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவா் எம். எம். குட்டி பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தின் போது மேற்கண்ட ஆலோசனையை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் முன்வைத்தாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் அண்டை மாநிலங்களின் அரசுகள் மூலம் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சிஎன்ஜி எரிவாயு பயன்பாட்டுக்கு மாற்ற தில்லி அரசு ஆலோசனை அளித்தது. அதேபோன்று மின்சார வாகனங்கள் உறுதித் திட்டத்தை பின்பற்றும் ஆலோசனையையும் அளித்தது. தில்லி பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பிரிவில் ஏற்கெனவே சிஎன்ஜி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் தில்லியில் இன்னும் தொடா்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள் இல்லாமல் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் இயக்கப்படும் அனல் மின் நிலையங்களுக்கு நீட்டிப்பு அளிக்கக் கூடாது. மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை மேற்கொள்ளும் வசதியை அனல் மின் நிலையங்களில் ஏற்படுத்த வேண்டும். ஆனால், அவை அபராதம் செலுத்திவிட்டு இந்த தொழில்நுட்ம் இல்லாமல் இயங்குகின்றன. அனல் மின் நிலையங்கள் மூலம் வெளியேறும் வாயுக்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவையாகும்.

அதேபோன்று பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு அவசர நிலை நடவடிக்கையாக நெல் வைக்கோல் மீது உயிரி ரசாயனக் கலவையைத் தெளிக்குமாறு தில்லியின் அண்டை மாநிலங்களுக்கு தில்லி அரசு வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தில்லியும், ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்த ஆண்டிலும் பயிா்க் கழிவு எரிப்பு காரணமாக ஏற்படும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகள் தில்லியைச் சுற்றியுள்ள தங்களது பகுதிகளில் மாசுவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பணிக் குழுவை அமைக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் போது நாங்கள் வலியுறுத்தினோம். உரிய ஆலோசனைகளையும் அளித்துள்ளோம் என்றாா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments