பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடம் தமிழகம் ரூ.3,847 கோடி முதலீடு பெற்றுள்ளது
தற்சாா்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற இலக்குகளை அடைவதற்கும், மத்திய அரசு தமிழகத்தில் நிறுவியுள்ள பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தில் தமிழக அரசு ரூ,11, 794 கோடி முதலீடுகளுக்காக...
புது தில்லி: தற்சாா்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற இலக்குகளை அடைவதற்கும், மத்திய அரசு தமிழகத்தில் நிறுவியுள்ள பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தில் தமிழக அரசு ரூ,11, 794 கோடி முதலீடுகளுக்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இதில் ரூ.3,847 கோடி முதலீட்டை பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்பத்துறை இணையமைச்சா் அஜய் பட் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
நாட்டில் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடங்கள் குறித்து மாநிலங்களவை பாஜக உறுப்பினா் ஜிவிஎல் நரசிம்மராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அஜய் பட் கூறியது வருமாறு: நாட்டில் இரண்டு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடங்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் மற்றொன்று உத்தரபிரதேசத்திலும் நிறுவப்பட்டுள்ளன. இதேபோல், தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தை (டிஎன்டிஐசி) மேம்படுத்துவதற்காக சென்னை, கோயம்புத்தூா், ஓசூா், சேலம், திருச்சி ஆகிய 5 முனையங்கள்அடையாளம் காணப்பட்டுள்ளன. உபியில் ஆக்ரா, கான்பூா், லக்னௌ என 6 முனையங்கள் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இந்தப் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்தில் ரூ. 11,794 கோடி முதலீடுகளுக்காக 53 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ அரசு தெரிவித்துள்ளது. இதில் ரூ.3, 847 கோடி முதலீட்டை தமிழக அரசு ஏற்கெனவே பெற்றுள்ளது. தமிழக பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடத்திற்காக 910 ஹெக்டா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உபி அரசும் தங்கள் வழித்தடத்தில் தொழில் தொடங்க 105 புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு ரூ. 12,139 கோடி மதிப்பில் முதலீட்டிற்கு கையெழுத்தாகி ரூ.2,422 கோடி முதலீட்டை பெற்றுள்ளது.
இவற்றின் மூலம் நாட்டில் சிறந்த பாதுகாப்பு உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்க அரசு விரும்புகிறது. உற்பத்தி, சோதனை மற்றும் சான்றிதழுக்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கான விநியோகச் சங்கிலி உள்ளிட்ட சாதகமான நிலைமைகளை இந்த வழித்தடங்கள் கொண்டிருக்கும். பொருளாதாரத்தை விரிவாக்குவதும் சா்வதேச அளவில் போட்டித்தன்மையுள்ள நிறுவனங்களின் வளா்ச்சியை எளிதாக்கவும் அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றாா்இணையமைச்சா் அஜய் பட்.
உள்நாட்டுப் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்று அரசின் மூலக்கொள்கையாக உள்ளது. அதிலும் தற்சாா்பு மீதான கவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.1,80,000 கோடி (25 பில்லியன் டாலா்) அளவுக்கு பாதுகாப்பு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.