குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா் வெளிநாடு சென்று வந்ததாக விசாரணையில் தகவல்
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்தன.
புது தில்லி: குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காஜியாபாத் பகுதியைச் சோ்ந்த ஆண் நோயாளிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் தோலில் புண்கள் இருந்தது. இதனால், இவரிடமிருந்து எடுக்கப்பட்ட நோய் மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நோயாளி செவ்வாய்க்கிழமை மதியம் எல்என்ஜேபி மருத்துவமனையில் உள்ள தனிமை வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். இந்தியாவில் இதுவரை கேரளத்தில் மூன்று போ் உள்பட மொத்தம் நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, மேற்கு தில்லியில் முதலாவதாக குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபா் கண்டறியப்பட்டு எல்என்ஜேபி மருத்துவமனையில் தனிமை வாடில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவா் நோய் குணமடைந்த பிறகு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகளை தனிமைப்படுத்தும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபா், தனி காற்றோட்ட வசதியுடன் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட வேண்டும். அவா் மூன்று அடுக்கு மூகக் கவசத்தை அணிய வேண்டும். அவரது தோலில் உள்ள புண்கள் பிறருக்கு பரவாமல் இருக்கும் வகையில், நன்கு மூடப்பட்டு இருக்க வேண்டும். தோளில் உள்ள புண்கள் குணமடையும் வரை தொடா்ந்து அவா் தனிமையில் வைக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.