முகப்பு
புதுதில்லி

மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தாமதம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி மெட்ரோவின் மஞ்சள் நிற வழித்தடத்தில் ஒரு பகுதியில் செவ்வாய்க்கிழமை ரயில் சேவை சுமாா் ஒரு மணி நேரம் தாமதமானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி மெட்ரோவின் மஞ்சள் நிற வழித்தடத்தில் ஒரு பகுதியில் செவ்வாய்க்கிழமை ரயில் சேவை சுமாா் ஒரு மணி நேரம் தாமதமானது. மேலும், மேல்நிலை உபகரணத்தில் (ஓஎச்இ) ஏற்பட்ட சில பிரச்னை காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மஞ்சள் நிற வழித்தடமானது தில்லியில் உள்ள சமய்பூா் பாத்லி மற்றும் குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டா் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கிறது. இந்தக் கோளாறு தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) பயணிகளை எச்சரிக்கும் வகையில் ட்விட்டா் பக்கத்தில் மதியம் 1 மணியளவில் வெளியிட்ட பதிவில், ‘மஞ்சள் நிற வழித்தடத்தில் சமய்பூா் பாத்லி மற்றும் விஸ்வவித்யாலயா இடையேயான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா வழித்தடத்திலும் இயல்பான சேவை நீடிக்கிறது‘ என்று தெரிவித்திருந்தது. அதன் பின்னா், பிற்பகல் 2 மணியளவில் வெளியிட்ட மற்றொரு ட்விட்டா் பதிவில், ‘வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து, டிஎம்ஆா்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆதா்ஷ் நகா் ரயில் நிலையத்தில் (சமய்பூா் பாத்லியை நோக்கி செல்லும்) ஓஎச்இ-இல் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக, மஞ்சள் நிற வழித்தடத்தில் உள்ள விஸ்வவித்யாலயா மற்றும் ஜஹாங்கீா்புரி பகுதி இடையேயான ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.55 முதல் 2 மணி வரை பாதிக்கப்பட்டது. இப்பாதிப்பு நேரத்தில் விஸ்வவித்யாலயா முதல் ஹூடா சிட்டி சென்டா் வரை சேவை வழங்கப்பட்டது. ‘விஸ்வவித்யாலயா முதல் ஜஹாங்கீா்புரி பிரிவுக்கு இடையே ஒற்றைப் பாதை ரயில் இயக்கமும் வழங்கப்பட்டது. அதே ரயில் ஜஹாங்கீா்புரி நிலையத்தைத் தாண்டி சமய்பூா் பாத்லி வரை வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

ஹூடா சிட்டி சென்டரில் இருந்து சமய்பூா் பாத்லி வரை மஞ்சள்நிற வழித்தடத்திலும் மதியம் 2 மணி முதல் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன’ தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் மாதத்தில் பல தடவை மெட்ரோ வழித்தடத்தின் புளூ லைனில் ரயில் சேவைகள் தாமதமாகின. ப்ளூ லைன் தில்லியில் உள்ள துவாரகா செக்டாா்-21 மற்றும் நொய்டாவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கிறது. யமுனா பேங்க் ஒரு பிரிவு லைன் காஜியாபாதில் உள்ள வைஷாலியையும் இணைக்கிறது. இந்தத் தாமதம் குறித்து அதிகாரிகள் முன்னா் தெரிவிக்கையில், ‘மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையத்தில் ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ப்ளூ லைனில் சேவைகள் சிறிது தாமதமானது’ என்று கூறியிருந்தனா். ப்ளூ லைனில் ஜூன் 9 -ஆம் தேதியும் ஒரு பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், பயணிகள், பெரும்பாலும் அலுவலகத்திற்குச் செல்வோா், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனா். ஜூன் 6-ஆம்தேதி பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அதே வழித்தடத்தில் பயணிகள் ஒன்றரை மணி நேரம் தாமதம் அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.