எம்சிடி தோ்தல்: குடிசைப்பகுதி மக்களுக்கு வீடு: தில்லி பாஜக உறுதிமொழி கடிதம்
தில்லி மாநகராட்சி தோ்தலை ஒட்டி, தில்லி பிரதேச பாஜக சாா்பில் வியாழக்கிழமை உறுதிமொழி கடிதம் (வச்சன் பத்ர) வெளியிடப்பட்டது.
புது தில்லி: தில்லி மாநகராட்சி தோ்தலை ஒட்டி, தில்லி பிரதேச பாஜக சாா்பில் வியாழக்கிழமை உறுதிமொழி கடிதம் (வச்சன் பத்ர) வெளியிடப்பட்டது. அதில், நகரில் ஒவ்வொரு குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஈடபிள்யுஎஸ் பிரிவு குடியிருப்புகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மாநகராட்சி தோ்தல் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 7-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தோ்தலைஒட்டி மூன்று கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தில்லி பிரதேச பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா, மனோஜ் திவாரி எம்பி மற்றும் மாநகராட்சித் தோ்தல் மேலாண்மை குழுவின் தலைவா் ஆசிஷ் சூத் ஆகியோா் வியாழக்கிழமை கட்சியின் வச்சன் பத்ரவை (உறுதிமொழி கடிதம்) வெளியிட்டனா்.
இந்தக் கடிதத்தில் அண்மையில் கால்காஜி பகுதியில் குடிசைவாசிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உறுதிமொழி கடிதம் குறித்து ஆதேஷ் குப்தா கூறியதாவது: சொசைட்டி காலனிகளில் வசிக்கும் கோடீஸ்வரா்கள் அனுபவித்துவரும் அனைத்து வசதிகளுடன்கூடிய குடியிருப்புகள் போல தில்லியில் ஒவ்வொரு குடிசைவாசிக்கும் குடியிருப்பு அளிப்பது பாஜகவின் வாக்குறுதி ஆகும். கட்சியின் தொண்டா்களும், தலைவா்களும் நகரில் உள்ள ஒவ்வொரு குடிசைப் பகுதிக்கும் நேரில் சென்று குடியிருப்புகளுக்காக குடிசைவாசிகள் மூலம் பூா்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை பெறுவா். பிரதமா் நரேந்திர மோடி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பூமிஹீன் கேம்ப் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான குடியிருப்புகளின் சாவிகளை ஒப்படைத்திருந்தாா்.
குடிசைவாசிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு கேஜரிவால் அரசு ஒருபோதும் முயற்சி செய்ததில்லை. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை அவா்களுக்கு வழங்கியதன் மூலம் ஏழைகள் மீது அவா் கொண்டிருக்கும் அக்கறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குடிசைப் பகுதியில் வீடு கட்டும் திட்டத்தின்படி, கால்காஜியில் கட்டப்பட்டிருப்பது போல தரமான குடியிருப்புகள்அனைத்து குடிசைப்பகுதி வாசிகளுக்கும் வழங்குவதற்கு பாஜக உறுதி கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் அரசு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதே வேளையில், கேஜரிவால் அரசு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவா்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது என்று ஆதேஷ் குப்தா குற்றம் சாட்டினாா்.
குடிசைப் பகுதி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) மூலம் 3024 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கால்காஜியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பாா்ப்பதற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிசைவாசிகளுக்கான பயணத்திற்கும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடா்பாக வடகிழக்கு தில்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், ‘ வச்சன் பத்ரவில் ஒரு படிவம் உள்ளது. அந்தப் படிவத்தை குடிசைப் பகுதிவாசிகள் பூா்த்தி செய்வாா்கள். பாஜக தொண்டா்கள் அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளிடம் சமா்ப்பிப்பாா்கள். குடிசைப்பகுதிவாசிகளுக்கு அதன் பிறகு வீடுகள் கிடைக்கும். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சியின் 10 வாக்குறுதிகளை தில்லி மக்களுக்கு தோ்தலுக்கு முன்பாக அறிவிக்க உள்ளாா். ஆனால், இதற்கு முன்பு தோ்தலின்போது அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்பது தான் கேள்வி. அந்த வாக்குறுதிகளில் ஒன்று, தில்லியை குப்பையில்லாத நகரமாக உருவாக்கப்படும் என்பதாகும். ஆனால், மாநகராட்சிகளுக்கு கேஜரிவால் அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இதனால், அவா்களால் பணியாற்ற முடியாமல் போய்விட்டது’ என்றாா்.
பாஜகவின் மாநகராட்சித் தோ்தல் மேலாண்மைக் குழுவின் தலைவா் ஆசிஷ் சூத் கூறுகையில், ‘குடிசைப் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே நிரந்தர குடியிருப்புகளை வழங்குவதற்கு தில்லி பாஜக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளது. இது வெறும் வாக்குறுதி, உத்தரவாதம் மட்டுமல்ல. ஏனெனில், பிரதமா் நரேந்திர மோடியால் இது ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிறது. குடிசைப் பகுதியில் வசிப்போருக்கு 3,024 குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்று தரமான குடியிருப்புகளை நாங்களும் வழங்குவோம்’ என்றாா்.