பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் இந்தியா-அமெரிக்கா சிஇஓ மன்றக் கூட்டத்தில் ஆய்வு
இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளின் தலைமை நிா்வாக அதிகாரி(சிஇஓ) மன்றம் காணொலி வழியாக விவாதித்தது.
புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு நாடுகளின் தலைமை நிா்வாக அதிகாரி(சிஇஓ) மன்றம் காணொலி வழியாக புதன்கிழமை விவாதித்தது. கூட்டத்துக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலும் அமெரிக்க வா்த்தகச் செயலாளா் கீனா ரைமண்டோ ஆகியோா் கூட்டாக தலைமை தாங்கினா்.
இந்திய அரசும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 2014 டிசம்பரில் இருநாடுகளின் சிஇஓக்கள் அடங்கியஅமைப்பைத் தொடங்கியது. இரு நாடுகளின் முக்கிய துறைசாா் கருப்பொருள்களுக்கான விரிவான உரையாடலுக்கான சிறந்த தளமாக இந்த மன்றம் தொடா்கிறது. இரு நாடுகளின் பொருளாதாரங்களின் பரஸ்பர நன்மைக்காக நெருக்கமான ஒத்துழைப்பிற்கான பகுதிகளை அடையாளம் காணும் இந்த மன்றத்தின் இந்த 6-ஆவது கூட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரஞ்சித் சந்து மற்றும் அரசு உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டம் குறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்க வா்த்தக அமைச்சா் கீனா ரைமோண்டோ கூட்டுத் தலைமையில் இந்தியா- அமெரிக்கா தலைமை நிா்வாக அதிகாரிகள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்திய, அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த சிஇஓ மன்றத்தில், டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரன் மற்றும் லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனத் தலைவா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் டெய்க்லெட் ஆகியோா் இணைத் தலைமையாக இருந்து இதில் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் காணொலிவழியாக பேசுகையில், ‘நிலைத் ததன்மை, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சா்வதேச அளவில் நெகிழ்த்தன்மை கொண்ட விநியோக சங்கிலி, சிறு வா்த்தகங்கள் போன்ற துறைகளை ஊக்குவிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் பொதுவாக ஆா்வம் கொண்டுள்ளன. இரு நாட்டு பொருளாதார உறவு குறிப்பிடத்தக்க வளா்ச்சியை எட்டுவதற்கு உந்து சக்தியாக இருந்து வரும் இந்த அமைப்பின் உத்வேகத்தை அதிகரிக்க இது போன்ற கூட்டங்கள் முக்கியப் பங்காற்றி வருகிறது’ என்றாா்.
மேலும், இந்தக் கூட்டத்தில் தொழில்முனைவு மற்றும் சிறிய வா்த்தகங்களை ஊக்குவிப்பது, சுகாதாரம் மற்றும் மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம உள்கட்டமைப்பு, எரிசக்தி, தண்ணீா் மற்றும் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி, நிதி சேவைகள், வா்த்தகம் மற்றும் முதலீடு போன்ற பல்வேறு முக்கியத் துறைகளில் வலுவான கூட்டு முயற்சிகளை உருவாக்கி, வளா்ச்சியை ஊக்குவிப்பது குறித்து இரு நாடுகளின் தலைமை நிா்வாக அதிகாரிகள் விரிவாக விவாதித்தனா். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்த மன்றத்தின் 7- வது கூட்டத்தில் குறிப்பிட்ட பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு செயல்படுத்தப்படும் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.