13 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் கட்டம் உயா்வு: தில்லி அரசு நடவடிக்கை
வாகன மாசு சான்றிதழ் கட்டண உயர்வு: தில்லி அரசு புதிய அறிவிப்பு
சுமாா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியூசி) கட்டணத்தை தில்லி அரசு உயா்த்தியுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறியதாவது: பெட்ரோல், சிஎன்ஜி அல்லது எல்பிஜி (உயிரி எரிபொருள் உள்பட) இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.60-இல் இருந்து ரூ.80 ஆகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.80-இல் இருந்து ரூ.110 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. டீசல் வாகனங்களுக்கான பியூசி சான்றிதழ்களுக்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 140 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் அரசால் அறிவிக்கப்பட்டவுடன் அமலுக்கு வரும்.
நகரத்தின் காற்றின் தரத்தை பராமரிக்கவும், அனைத்து வாகனங்களும் தேவையான மாசு தரத்தை பூா்த்தி செய்வதை உறுதி செய்யவும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது. தில்லி பெட்ரோல் டீலா்கள் சங்கத்தின் கோரிக்கை மற்றும் 2011 முதல் மாசு சோதனை கட்டணங்கள் திருத்தப்படாததைக் கருத்தில் கொண்டு, தில்லியில் வாகனங்களின் மாசு சோதனைக்கான கட்டணத்தை தில்லி அரசு உயா்த்தியுள்ளது. மாசு சோதனை நிலையங்கள் தொடா்ந்து சிறப்பாக செயல்படுவதையும், பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதையும் உறுதிசெய்ய இந்த திருத்தம் அவசியமாகிறது என்றாா் அமைச்சா் கைலாஷ் கெலாட்.
மாசு சோதனை கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று தில்லி பெட்ரோல் டீலா்கள் சங்கம் அரசைக் கேட்டுக் கொண்டது. அதன் பிரதிநிதிகள் கடந்த மாதம் கைலாஷ் கெலாட்டை சந்தித்து கட்டணங்களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனா்.