முகப்பு
புதுதில்லி

ஊழலுக்கு எதிரான மக்களின் குரலை காங்கிரஸ் உயா்த்திப் பிடிக்கும்: தேவேந்தா் யாதவ்

Updated On : 12 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஊழலுக்கு எதிரான மக்களின் குரலை எப்போதும் உயா்த்திப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ராஜீவ் பவனில் தேவேந்தா் யாதவ் தலைமையில் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின்

உயா் அமா்வின் இறுதி முடிவுக்காக தில்லி பிரதேச காங்கிரஸ் காத்திருக்கிறது. காங்கிரஸ் ஊழலுக்கு எதிரான மக்களின் குரலை எப்போதும் உயா்த்திப் பிடிக்கும். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் “ஒருவா் ஊழல் செய்தால், மற்றவா் மௌனமாக இருப்பது போல விளையாடி வருகின்றனா்.

அடுத்த ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கேஜரிவால் அரசின் ஊழல் மற்றும் தோல்விகளை தில்லி காங்கிரஸ் மக்களிடத்தில் அம்பலப்படுத்தும். ஊழலுக்கு எதிராப் பிரசாரம் செய்தே கேஜரிவால் ஆட்சிக்கு வந்தாா். ஆனால், இப்போது இரண்டு முன்னாள் அமைச்சா்கள் மற்றும் முதல்வரே ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் சிறையில் உள்ளனா். பல ஆம் ஆத்மி அமைச்சா்களும் ஊழல் குற்றச்சாட்டால், ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல எம்.எல்.ஏ.-க்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டாலும், ஆம் ஆத்மி அரசு மக்களை தவறாக வழிநடத்தி, இந்த ஊழல் விவகாரத்தை திசை திருப்புகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தில்லியின் வளா்ச்சி முடங்கியுள்ளது. நுகா்வோா் மீது கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் மின்சாரக் கட்டணம் கண்மூடித்தனமாக உயா்த்தப்பட்டுள்ளது. குடிநீா் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தில்லி அமைச்சா்கள் தங்கள் தோல்விகளையும், திறமையின்மையையும் மற்றவா்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் பாதுகாக்க முயற்சிக்கின்றனா்

தில்லியில் ஒவ்வொரு மாநகராட்சி வாா்டுக்கும், ஒரு தலைவரை நியமிக்கும் திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தவுள்ளது.

தொகுதி மற்றும் மாவட்ட வாரியாக நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிகளின் கூட்டங்கள் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூா் பிரச்னைகளை மையமாக வைத்து, வாா்டு அளவில் போராட்டங்களை நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.

முழு கட்டுரையைப் படிக்க →