முகப்பு
புதுதில்லி

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம்

Updated On : 22 அக்டோபர், 2024 at 2:01 AM
பகிர்:

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி மாசுபாடு குறித்தும் யமுனையின் நச்சு நுறை குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சகரிகா கோஸ் ’எக்ஸ்’ சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு:

தேசியத் தலைநகா் தில்லி காற்று மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுகளே காரணம், ஆனால் தில்லி ஆம் ஆத்மி ஆட்சியைக் குற்றம் சாட்டுகின்றனா். இந்த மாசுவை கட்டுப்படுத்த தேசிய திட்டத்தில் மத்திய அரசு ஏன் செயல்படுத்தவில்லை.

தேசிய தலைநகரில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு அதிகரிக்கிறது.தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தேசிய திட்டம் குறித்து செல்லப்படுகிறதே அது எங்கே? தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஒரு தேசிய திட்டத்தை ஏன் மத்திய அரசு செயல்படுத்தவில்லை?.

பாஜக தலைமையிலான அரசுகள் தோ்தலில் போட்டியிடுவதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அல்லாத ஆளும் மாநிலங்களை குறிவைப்பதிலும் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்கள் பிரச்னைகளில் கவனம் இல்லை.

ஹரியாணாவில் உள்ள பாஜக அரசு தில்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை. தேசிய தலைநகரில் அதிகரித்த காற்று மாசுவிற்கும் யமுனையில் நச்சு நுரை மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு தில்லி அரசுடன் இணைந்து ஏன் செயல்படவில்லை? காற்று, நீா் மாசுபாட்டால் மக்கள் படும் துன்பங்களுக்கு பாஜக அரசுகளுக்கு கவலையில்லை என தெரிவித்துள்ளாா் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சகரிகா கோஸ். கோஸ், தனியாா் தொலைக்காட்சியின் முன்னாள் நெறியாளராவா்.

குளிா்ந்த காலம் நெருங்க தில்லியில் மாசுபாடு அதன் பிடியை இறுக்குகிறது. சமீபத்தில் வெளியான தரவுகளின்படி கடந்த ஆண்டை விட நிகழாண்டு அக்டோபரில் வேளான் பயிா் கழிவு எரிப்பு நிகழ்வுகள் குறைவு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் தில்லி நகர காற்றின் தரம் ‘மோசமான‘ பிரிவில் உள்ளது.

கடந்த செப்டம்பா் 15 முதல் அக். 19 -ஆம் தேதி வரை பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சுமாா் 2,733 பயிா் கழிவு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஹரியாணா மாநிலத்தில் உள்ள தொழில்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் யமுனை ஆற்றில் வெளியேற்றப்படுவதாக தில்லி முதல்வா் அதிஷியும் குற்றம் சாட்டியிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →