"வடக்கூர் ரேஷன் கடையை புதிய கட்டடத்துக்கு மாற்ற வேண்டும்'
ஆரல்வாய்மொழி வடக்கூரில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா கண்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆரல்வாய்மொழி வடக்கூரில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா கண்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் உள்ள நியாய விலை கடை பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையல் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் உள்ளூர் மேம்பாட்டு 2015-2016 நிதியில் ரூ. 5.50 லட்சம் நிதியும், பொது நிதியில் இருந்து 2.30 லட்சமும், ஆக மொத்தம் ரூ. 7.80 லட்சம் செலவில் ஆரல்வாய்மொழி, வடக்கூர் , வேட்டை வெளிப் பகுதியில் பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
இக்கட்டடத்தை கடந்த 19.6.2016 அன்று மத்திய இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். ஆனால் இதுநாள் வரை இக்கட்டடம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து, அப்பகுதி முன்னாள் வார்டு உறுப்பினரும், பாஜக ஆரல் நகரத் தலைவருமாகிய மாதேவன் பிள்ளை கூறியதாவது:
வடக்கூர் பகுதியில் இப்போது இயங்கி வருகின்ற நியாய விலைக் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனை புதிதாக திறக்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்துக்கு மாற்றக் கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக வாடகை கட்டடத்தில், நெருக்கடியான பகுதியில் இயங்கி வருகிற வடக்கூர் நியாயவிலைக் கடையை பல்நோக்கு கட்டடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இப்பகுதி மக்களை திரட்டி வடக்கூர் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தார்.