குலசேகரம் அருகே சாலை விபத்தில் இளைஞர் சாவு
குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
குலசேகரம் அருகே செருப்பாலூர் ஈஞ்சவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். பெயின்டிங் தொழிலாளியான இவர், இதே பகுதியைச் சேர்ந்த சஜூகுமாருடன் (25) ஒரே மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை செருப்பாலூரிலிருந்து குலசேகரத்திற்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சஜூகுமார் ஓட்டினார்.
இவர்கள், செருப்பாலூர் அரசுப் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த இருவரும் குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு தீவிரச் சிகிச்சைக்காக ஸ்ரீ நெய்யாற்றின்கரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீகண்டன் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். சஜூகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.