திக்குறிச்சியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கன மழையால் திக்குறிச்சி பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சாலையில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியதால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கன மழையால் திக்குறிச்சி பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சாலையில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியதால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட அணைகளிலிருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவில் தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி - சிதறால் சாலையில் வள்ளக்கடவு பகுதியில் சுமாா் 1 கி.மீ. தொலைவு சாலையில் 3 அடி உயரத்துக்கும் மேல் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால், இச் சாலை வழியாக வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வள்ளக்கடவு மற்றும் அதையொட்டிய பகுதியில் உள்ள 25 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
இந்த நிலையில், களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்பட மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்தது.
Advertisement