பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ வெளிநாட்டு உளவு நிறுவனத்துக்கு உதவுவதாகக் கூறிய நபர் கைது செய்யப்பட்டது குறித்து...
பிகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் வலைத்தளத்தில் சென்று, பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாக செய்தி ஒன்றை அனுப்பியக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அமல் குமார் திவாரி எனக் கண்டறியப்பட்ட குற்றவாளி வியாழக்கிழமை (ஏப்.9) கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீட்டிலிருந்து லேப்டாப், செல்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிஐ அறிக்கையின்படி, பிரதமரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவுவதற்கு ஈடாகப் பணம் கோரி, அமெரிக்காவைச் சேர்ந்த உளவு நிறுவனத்தின் வலைத்தளத்துக்கு திவாரி செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டார்க் வெப்பை அணுகுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல விபிஎன் -களையும் செயலிகளையும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரது செல்போனில் கண்டறிந்தனர்.
Advertisement
மேலும், சைபர்குற்றங்களை மேற்கொள்வதற்காக அவர் பயன்படுத்திய போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இந்த சம்பவத்துக்கும் திவாரிக்கும் தொடர்புடையதாக அவரே ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே கொல்கத்தா விமானநிலையத்தின் வலைத்தளத்தை ஹேக் செய்வதாக மிரட்டியதற்கான வழக்கு அவர்மீது பதிவு செய்யப்பட்டிருந்தததாகவும் தற்போது அவரிடம் மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.