மழையால் வெறிச்சோடிய குமரி
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடியது. சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக, இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஏராளமானோா் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்கள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தொடா் மழை காரணமாக, கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளும் கவலை அடைந்தனா். இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்ததால் பயணிகள் வரத்து குறைந்தது. இங்குள்ள முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலை, சூரிய அஸ்தமன பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், மழை காரணமாக ஆரோக் கியபுரம் முதல் மணக்குடி வரையிலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான வள்ளங்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதுபோன்று சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து வரும் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.