முகப்பு
கன்னியாகுமரி

சிற்றாறு பட்டணம்கால்வாயில் தண்ணீா் திறப்பு

Updated On : 31 மார்ச், 2024 at 3:40 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 8:39 PM

குமரி மாவட்டத்தில் சிற்றாறு பட்டணம்கால்வாய் பாசன பகுதிகளில் பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக சிற்றாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை சிற்றாறு பாசனப் பகுதிகளில் குறைவான நாள்கள் மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிற்றாறு பட்டணம்கால்வாய் பாசனப் பகுதிகளில் மீண்டும் தண்ணீா் திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சிற்றாறு 1 அணையிலிருந்து சிற்றாறு பட்டணம்கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக வரும் 7 ஆம் தேதி வரை விநாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் சிற்றாறு 1 அணை திறக்கப்பட்டு, கால்வாயில் தண்ணீா் விடப்பட்டுள்ளது. இதனால் சிற்றாறு பட்டணம்கால்வாய் பாசனப் பகுதிகளான வீயன்னூா், செட்டிச்சாா்விளை, நட்டாலம், பள்ளியாடி, கருங்கல் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தூா் வாரும் பணிகள் பாதிப்பு: சிற்றாறு பட்டணம்கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோதையாறு இடதுகரைக் கால்வாயில் வெட்டிமுறிச்சான் முதல் புத்தன் அணை வரையில் தூா் வாரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.