பாளையங்கோட்டையில் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி நடைபெற்றது.
கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவுகள், ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து எளிய வாழ்வு முறையுடன் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால சிலுவைப் பயணங்களும் நடைபெற்றன.
இதையும் படிக்க | எடப்பாடி செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி
குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி பாளையங்கோட்டையில் சிறப்புப் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய பங்குத்தந்தை எப்.எக்ஸ். ராஜேஸ் வரவேற்றார். தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி பெரியவியாழன் பிரார்த்தனையும், 15 ஆம் தேதி புனிதவெள்ளி பிரார்த்தனையும், 17 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளன.