நாலுமாவடி கோயிலில் 1,008 திருவிளக்கு வழிபாடு
குரும்பூர் அருகே நாலுமாவடியில் உள்ள அருள்மிகு பாதக்கரை சுவாமி கோயிலில் படக்கஞ்சித் திருவிழாவையொட்டி 1,008 திருவிளக்கு
குரும்பூர் அருகே நாலுமாவடியில் உள்ள அருள்மிகு பாதக்கரை சுவாமி கோயிலில் படக்கஞ்சித் திருவிழாவையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை அன்னதானம், மகா கணபதி ஹோமம்,நவக்கிரக, சுதர்சன ஹோமங்கள், கோபூஜை உள்ளிட்டவை நடை பெற்றது. தொடர்ந்து, சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனை, பகலில் சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. பிற்பகலில் பக்தர்களுக்கு படக்கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், வணிகம், தொழில்கள் பெருகவும், குடும்பங்களில் ஒற்றுமை நிலவவும் வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றன.
இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். இரவில் அன்னதானம், சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை நாலுமாவடி ஊர்மக்கள் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
சாத்தான்குளம் விநாயகர் கோயிலிலில்...
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் கோயிலிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலிலில் ஸ்ரீசபரிகிரிவாசன் மகர ஜோதி ஐயப்ப பக்தர்கள் குழுவின் 20ஆவது ஆண்டு மண்டல பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலிலில் காலை 9 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. திருவிளக்கு பூஜையை எம்.குருசாமி தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், கோயில் தர்மகர்த்தா விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.