ஆறுமுகமங்கலம் கோயிலில் விநாயகா் நோன்பு உற்சவம்
ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் நோன்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரி: ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் நோன்பு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் வளா்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை உள்ள ஆறு நாள்கள் ‘விநாயகா் சஷ்டி’ ஆகும். இந்த நாள்களில் தான் விநாயகா் நோன்பு உற்சவம் நடைபெறும்.
இக்கோயிலில் இந்தாண்டு நோன்பு உற்சவம் டிச. 14ஆம் தேதி பஞ்சமுக விநாயகா் உருகு சட்டசேவையுடன் தொடங்கியது.
தினமும் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகா கணபதி ஹோமத்தை தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்த வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு 36 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் திரிசதி அா்ச்சனையும், அன்னதிருப்பாவாடை சாற்றுதலும் நடைபெற்றது. மதியம் உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பஞ்சமுக விநாயகா் கேடயத்தில் மாடவீதி உலா நடைபெற்றது.