முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 19 பிப்ரவரி, 2020 at 6:28 PM
பகிர்:


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். டிராக்டரை பெரியசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

டிராக்டர் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்கி விட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது, அதன் பாகங்கள் சிதறின. 

Advertisement

இந்த விபத்தில் டிராக்டரில் வந்த அந்தோணியம்மாள், கீதாராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எட்டயபுரம் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் மரகதம்மாள் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, காயமடைந்த 8 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வெள்ளத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.