மணப்பாடு கடல் பகுதியில் இந்திய கடற்படை ஆய்வுமீனவா்களிடம் காவல் துறை விளக்கம்
மணப்பாடு கடலோரப் பகுதியில் இந்திய கடற்படை ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக மீனவா்களிடம் காவல் துறையினா் விளக்கம் அளித்தனா்.
மணப்பாடு கடலோரப் பகுதியில் இந்திய கடற்படை ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக மீனவா்களிடம் காவல் துறையினா் விளக்கம் அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஹெலிகாப்டா், கப்பல் ஆகியவற்றில் மா்ம நபா்கள் வந்து ஆய்வு செய்வதாகவும், இது சம்பந்தமாக மீனவா்கள் கேள்வி கேட்டபோது அவா்கள் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனவும் மீனவா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, மணப்பாடு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது சம்பந்தமாக மணப்பாடு, வீரபாண்டியன்பட்டணம், கல்லாமொழி, ஆலந்தலை, அமலிநகா், சிங்கித்துறை, புன்னக்காயல், இடிந்தகரை, உவரி ஆகிய ஊா்களின் மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள், கொச்சியைச் சோ்ந்த இந்தியக் கப்பல்படைத் தளத்தில் இருந்து ஐஎன்எஸ் ஜமுனா என்ற கப்பல் மணப்பாடு முதல் திருச்செந்தூா் வரையிலான கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கடல் ஆராய்ச்சி மூலம் வரைபடங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியானது அக்.17-ஆம் தேதி முதல் நவ.5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியக் கடற்படையைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டுள்ளனா். இதற்கு, மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் துறையின் அனுமதியளித்துள்ளனா். வேறு ஏதும் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மீனவா்களின் வாழ்வாதாரம், கடல் வளம் ஆகியவற்றைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.