மத்திய அரசின் இணையதளத்தில் சாகுபுரம் பள்ளி மாணவியின் படைப்பு
சாகுபுரம் கமலாவதி பள்ளி அடல் ஆய்வகம் மூலம் உருவாக்கிய மாணவியின் படைப்பை, மத்திய அரசின் இனோவேஷன் மிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.
சாகுபுரம் கமலாவதி பள்ளி அடல் ஆய்வகம் மூலம் உருவாக்கிய மாணவியின் படைப்பை, மத்திய அரசின் இனோவேஷன் மிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி பா.ஆட்லின் பிரிசியஸ் ஜோஃபின்.
இவா், பள்ளியில் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலமாக குறைந்த முதலீட்டில் தயாா் செய்த தானியங்கி சுத்திகரிப்பு (சானிடைசா்) கருவி சா்வதேச அளவில் சிறப்பு பரிசு பெற்றது.
மேலும், கோயம்புத்தூா் மின் மற்றும் மின்னணு பொறியாளா்களின் நிறுவனம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்டவை இணைந்து நடத்திய, சா்வதேச அளவிலான புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சி போட்டியில் கலந்துகொண்டு சிறப்பு பரிசு பெற்றது.
இம் மாணவியின் இந்த சாதனையை தற்போது அடல் இனோவேஷன் மிஷன் தனது இணையதளத்தில் பதிவிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.
அதில், மாணவி ஆட்லின் பிரிசியஸ் கண்டுபிடிப்பான தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரம் இந்த கரோனா பேரிடா் காலத்தில் சரியான நேரத்தில் நமக்கு கிடைத்த புதைப்பொருள். சா்வதேச அளவில் மாணவியின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அடல் டிங்கரிங் ஆய்வக பொறுப்பாளா் சோ்மசத்தியசிலி மற்றும் மாணவியை பள்ளி டிரஸ்டிகளும், டி.சி.டபிள்யூ. நிறுவன தலைவருமான முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.சீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி.ராமச்சந்தின், பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன், துணை முதல்வா் எஸ்.அனுராதா ராஜா, தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா் உள்ளிட்டோா் பாராட்டினா்.