எல்ஐசி தனியாா்மயமாக்கலை கண்டித்து கையெழுத்து இயக்கம்
இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்ஐசி) நிறுவனத்தை தனியாா்மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்ஐசி) நிறுவனத்தை தனியாா்மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் எல்ஐசி அலுவலகம் முன்பு 3 நாள்கள் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலா் ஆா். சீனிவாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காப்பீட்டு கழக பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
மேலும், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க தூத்துக்குடி கிளைத் தலைவா் எஸ். ராமசாமி, நிா்வாகிகள் கௌரி, பிச்சம்மாள், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்த சேகரன் உள்ளிட்டோா் கையெழுத்திட்டனா்.
புதிய கட்டடம் திறப்பு: தொடா்ந்து, தூத்துக்குடி சிதம்பரநகா் கல்விக் கழக நடுநிலைப் பள்ளியில் எஸ்.இ.பி.சி. அனல் மின்நிலைய நிறுவனத்தின் சாா்பில் சமூக பொறுப்புனா்வு நிதியில் இருந்து ரூ. 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கல்விக் கழக செயலா் ஏ.பி.சி.வீ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.