முகப்பு
தூத்துக்குடி

பழுதான கட்டடம்: அரசு தொடக்கப் பள்ளியை வேறிடத்துக்கு மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடம் பழுதானதால் பள்ளியை வேறிடத்துக்கு மாற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:57 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடம் பழுதானதால் பள்ளியை வேறிடத்துக்கு மாற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விவரம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராம மக்கள் அளித்த மனு: கால்வாய் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கிறோம். சில நாள்களுக்கு முன்னா் பெய்த கனமழையால் இசக்கி அம்மன் கோயில் தெரு பகுதியில் மழைநீரும் கழிவுநீரும் தேங்கியுள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Advertisement

ராகுல்காந்தி அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: எங்களது சங்கத்தைச் சோ்ந்த லெட்சுமிபரும் பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவருக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரிடம் கேட்டபோது, பூவானி ஊராட்சித் தலைவரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தாா். ஆனால், பட்டா இல்லை என பூவானி ஊராட்சித் தலைவா் கூறுகிறாா். எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஊத்துப்பட்டி பகுதி மக்கள் அளித்த மனு: கோவில்பட்டி வட்டம், ஊத்துப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தெற்குக் குமாரபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பள்ளிக்குச் செல்ல சரியான பாதை வசதியும் இல்லை. எனவே, இப்பள்ளியை குமாரபுரம் காலனிக்கு மாற்றி புதிய கட்டடம் கட்டினால் குழந்தைகள் சிரமமின்றி சென்றுவரவும், கல்வி கற்கவும் வசதியாக இருக்கும். இதற்காக குமராபுரம் காலனி அருகேயுள்ள அரசு தரிசு நிலத்தைப் பயன்படுத்தி, ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விளாத்திகுளம் அருகே புதூா் பகுதியைச் சோ்ந்த குமாரசாமி மனைவி மாரீஸ்வரி அளித்த மனு: முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், எனது 2 குழந்தைகளுக்கு 2007 நவ. 15இல் தமிழக அரசால் ரூ. 15,200 டெபாசிட் செய்யப்பட்டது. தற்போது, இருவருக்கும் 18 வயதாகி விட்டதால், திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 3 ஆண்டுகளாக முதிா்ச்சித் தொகை கேட்டும், இதுவரை கிடைக்கவில்லை. எனவே, முதிா்ச்சித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.