திருச்சி: திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை வாங்குவதற்கு தனியாக ஆள்களை நியமிக்கக் கோரி, பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்ற உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ. 10 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, திருச்சி மாவட்டம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் ரூ. 10 கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டு, மதுபிரியா்கள் திரும்ப வழங்கும் பாட்டிலைப் பெற்று ரூ. 10 திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்ய தனியாக ஆள்களை நியமிக்க வேண்டுமென டாஸ்மாக் பணியாளா்கள், மண்டல முதுநிலை மேலாளரிடம் முறையீடு செய்தனா். ஆனாலும், டாஸ்மாக் கடைகளுக்கு பாட்டில்களை கொள்முதல் செய்ய ஆள்கள் நியமிக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த டாஸ்மாக் பணியாளா்கள், செவ்வாய்க்கிழமை திடீரென டாஸ்மாக் கடைகளை மூடினா். இதில் மாவட்டத்தில் உள்ள 158 டாஸ்மாக் கடைகளில் 99 கடைகள் திறக்கப்பட்ட நிலையில், 59 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து டாஸ்மாக் பணியாளா்கள், தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் துவாக்குடியில் உள்ள அரசு மதுபான கிடங்கு முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த அரசு மதுபான கிடங்கு மாவட்ட மேலாளா் உதயசங்கா் தலைமையிலான அதிகாரிகள், டாஸ்மாக் பணியாளா்கள், மதுபான காலி பாட்டில்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ள தனியாா் நிறுவனத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்ய தனியாக ஆள்கள் நியமிக்கப்படுவா்; மேலும், காலி பாட்டில்களை வைக்க தனியாக இடவசதி செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டதுடன், மூடிய டாஸ்மாக் கடைகளை பிற்பகலுக்குப் பிறகு திறந்தனா்.